நாடுகடத்தல் முகாமில் சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்
சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள 'தர்ஹீல்' நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் நாளை இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்.
இத்தகவலை ரியாத்துக்கான இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள 'தர்ஹீல்' நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் வெள்ளிக்கிழமை (30) இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது குழுவினரும் 2021 மே 03 மற்றும் மே 05 ஆந் திகதிகளில் இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்.
சவூதி அதிகாரிகளுக்கும் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் விளைவாகவே நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்பி வைப்பதற்கான இந்த செயன்முறை இடம்பெறுகின்றது.
நாடுகடத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 154 இலங்கையர்கள் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்புவதற்காக 2020 ஜூலை முதல் தூதரகம் வசதிகளை வழங்கியுள்ளது - என்றுள்ளது.