முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ள புலனாய்வாளர்கள்- அச்சுறுத்தப்படும் மக்கள்!
தமிழர் தாயகப் பகுதியில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்யக்காலில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் அமைக்கப்பட்டு வருடம் தோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.
இவ்வாறான நிலையில், இந்த வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைவேந்தல் செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவித்தாலும் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு நினைவேந்தல் வளாகத்தை சூழ காவல்துறையினர் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நினைவேந்தல் வளாகத்துக்குள் வருபவர்களை பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.