மாணவர்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை..!
மின்னஞ்சல் கணக்குகளை பாடசாலை மாணவர்களுக்கு உருவாக்கும்போது, பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் குழுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது, மாணவர்களின் சரியான வயது போன்ற தகவல்களை வழங்குமாறு, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில், காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இணையவழி மூலமான கல்வி முறைமை காரணமாக, மாணவர்களின் பாவனைக்காக கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட கணினி சாதனங்களை அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை
எனினும் திறன்பேசிகளை வழங்கும்போதும், மின்னஞ்சல் ஒன்றினை திறக்கவேண்டி உள்ளது.
இதற்காக பெற்றோர்களின் தரவை வழங்குவதன் மூலம், குழந்தைகள் எந்தவொரு இணையதளத்தையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகையினால் பிள்ளைகளின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தேவையற்ற காணொளிகள் மற்றும் தேவையற்ற இணையத்தளங்களைப் பார்ப்பதற்கு பிள்ளைகளுக்கு அனுமதிக்காது எனவும், அது தாமாகவே கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
விசேட அறிவுறுத்தல்
கற்றல் செயல்பாடுகளுக்கு தொலைபேசியைப் பயன்படுத்தும்போது இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மூலம் பயன்படுத்தப்படும் கைத்தொலைபேசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.
தவறான முறையில் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டால், அதை விரைவாக சமாளிக்கும் திறன் இந்த கைத்தொலைபேசிகளுக்கு உள்ளது.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட கைத்தொலைபேசிகளில் சிம் அட்டைகளை இடும்போது, அது தொடர்பான தகவல்களை ஆணைக்குழு பெறுகிறது.
எனவே, கைத்தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டவையா? என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறும் காவல்துறை அதிகாரிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
