மீண்டும் இணையப்போகும் ரணில் - சஜித்..! மனோ கூறும் புதிய தகவல்
ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு சந்திக்க இருக்கின்றோம். இதன் போது நான் ஏற்கனவே கூறியதைப் போன்று வடகிழக்கில் மட்டுமாவது மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு நான் நிச்சயம் கூறுவேன்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தல் என்றால் அலர்ஜி, உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் இல்லாமல் ஆக்கிவிட்டார். மாகாண சபையும் இல்லை. போகின்றதை பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலையும் இல்லாமல் ஆக்குவார் போன்று தெரிகிறது.
அதிபர் தேர்தலை நடாத்தி வெற்றி பெறலாம் என அவர் நினைக்கின்றார், அதுவரை எந்த தேர்தலையும் நடாத்தி மக்களுடைய கருத்து வெளிப்பட்டு விடக்கூடாது என அவர் நினைக்கின்றார்.
மனோவின் நிலைப்பாடு

வடக்கு கிழக்கில் தேர்தலை நடத்தினால் அவருக்கு பெரிய நஷ்டம் வரப்போவதில்லை, தென்னிலங்கையில் தேர்தலை நடத்தினால் தான் அவருக்கு எதிராக மக்கள் அணி திரண்டால் அவருடைய கனவு புஸ்வானம் ஆகிவிடும் என அவர் நினைக்கிறார். வடகிழக்கின் மக்கள் இந்த மாகாண சபை தேர்தலையே ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக அதாவது சமஸ்டியை நோக்கி நீளப் பாய்ச்சலில் பாயப் போகிறோமா? அல்லது சமஸ்டியை நோக்கி வழித்தங்கல் முகாம்களில் தங்கி அடுத்த கட்டத்திற்கு போகப் போகின்றோமா? என்பதை முடிவு செய்யலாம்.
எனது நிலைப்பாடு இங்கே முக்கியமில்லை நான் இரண்டையும் வடகிழக்கு அரசியல் பரப்பிலே காண்கின்றேன். இதயபூர்வமாக நல்லது நடக்க வேண்டும் என்ற விரும்புகின்றேன் இங்கே வாழுகின்ற அனைவரும் எனது ரத்தத்தின் ரத்தங்கள் தான் நான் வேறு நீங்கள் வேறு அல்ல அந்த எண்ணப்பாடு எனக்கு எப்போதும் இருக்கிறது, நான் நடைமுறையிலும் அதை நிறைவேற்றி காட்டி இருக்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க சர்வபோக நிவாரணி போல எல்லா நோய்களுக்கும், எல்லா சிக்கல்களுக்கும் அதிபர் தேர்தல் தான் ஒரே சர்வபோக நிவாரணி என காட்டுவதற்கு விரும்புகின்றார்.
விடுதலைப்புலிகளின் தலைவர்

இதையெல்லாம் பார்த்து களைத்துப் போனவர்கள் நாங்கள் எங்களுக்கு தெரியும் இது, 2015 இல் பார்த்தோம், சந்திரிக்காவிடம் பார்த்தோம், பின்னர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு வந்தார். வடகிழக்கிலே மக்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாடை செய்ததாக சொல்லப்படுகிறது, அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது வருடாந்த உரையின் போது மகிந்த ராஜபக்ச ஜதார்த்த வாதி என்று சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
எனவே ரணில் விக்ரமசிங்க பழைய மருந்தை எல்லாம் எங்களுக்கு தர வேண்டாம் முதலில் இருக்கின்ற பிரச்சனைக்கு தீர்வை காணுங்கள். அடுத்த அதிபர் தேர்தலின் போது அன்றைய காலகட்டத்தை வைத்துக்கொண்டு நாங்கள் தீர்மானம் எடுப்போம்.
இன்று நாங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கின்றோம் எங்களுடைய வேட்பாளராக நாங்கள் அதிகாரபூர்வமாக அல்லாது விட்டாலும் கூட சஜித் பிரேமதாசவைத்தான் கருதுகிறோம்.
ஒருவேளை சஜித்தும் ரணிலும் ஒன்று சேரலாம் அதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது, பல முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல முடியாது என தெரிவித்தார்.