கணவருக்காக நீதிகோரி முடியை காணிக்கை செலுத்திய சந்தியா எக்னெலிகொட!
தென்னிலங்கையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி அவரது மனைவி, தனது முடியை காணிக்கை செலுத்தி விசேட பூஜை ஒன்று மேற்கொண்டுள்ளார்.
சந்தியா எக்னெலிகொட இன்று முற்பகல் கொழும்பு முகத்துவாரம் காளியம்மன் ஆலயத்தில் இந்த விசேட பூஜையை நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட 56 ஆண்டுகளாக பராமரித்து வந்த தனது தலைமுடியை முற்றாக வழித்து மொட்டையடித்து அதனை காணிக்கையாக செலுத்தி, விசேட பூஜையில் கலந்துக்கொண்டுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவருக்காக நீதியை பெற்றுக்கொடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கு தண்டனை வழங்குமாறு வேண்டியே அவர் இந்த பூஜையை நடத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்பதால், காளியம்மன் மற்றும் கண்ணகையம்மன் ஆகியோரிடம் நீதி வேண்டி செல்ல போவதாக சந்தியா குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் எக்னேலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி இரவு கொழும்புக்கு அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் வைத்து கடத்திச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான உண்மை முழுமையாக வெளியாகி, நீதிமன்றத்தின் ஊடாக பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடுகள் இன்னும் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.