அரசாங்கம் வீழ்ச்சியடைவதை விட பயங்கரமான நிலைமையை நாடு எதிர் நோக்கும்!
சிறிலங்கா அரச தலைவர், பிரதமர் உட்பட அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளுக்கு உணர்வுபூர்வமாக செவிசாய்க்க வேண்டும்.
அதேவேளை நாடு எதிர்நோக்கியுள்ள உக்கிரமான பொருளாதார நெருக்கடியை தீர்க்க வெளிப்படையாகவும் நேர்மையான நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும் என கொழும்பு இளம் பௌத்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர தென்னிலங்கை ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
நாடு எதிர்நோக்கியுள்ள உக்கிரமான அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
எதிர்காலத்தில் நாடு வீழ்ச்சியடைய கூடும். அது அரசாங்கம் ஒன்று வீழ்ச்சியடைவதை விட பயங்கரமான நிலைமையாக இருக்கும். இதன் காரணமாக மக்கள் போராட்டம் மேலும் அதிகரிக்கலாம்.
இதனால், ஏற்படக் கூடிய நிலைமை பாரதூரமானதாக இருக்கும். அரசாங்கம் ஒன்று வீழ்ந்தால் எவரும் மீண்டும் அரசாங்கத்தை அமைக்கலாம். ஆனால் அரசு அதாவது நாடு வீழ்ச்சியடைந்தால், அது பாரதூரமான பிரச்சினையாக மாறும்.
இதனால், அரச தலைவர், பிரதமர் மற்றும் நாட்டிற்கு பொறுப்புக் கூற வேண்டிய அரசியல் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து நாட்டை காப்பாற்ற குறுகிய மற்றும் மத்திய கால வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.