மக்களால் தார்மீக அதிகாரம் பிடுங்கப்பட்ட பின்னரும் பதவி துறக்கத் தயங்கும் கோட்டாபய!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின், பதவியில் இருந்து விலகும் முடிவு திரும்பப்பெறப்படும் அறிகுறிகள் தென்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் அதனை வெளியிடுவார் என அரச தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மாத்திரமே அரச தலைவர் வெளியிடும் அறிக்கைகளாக கருதப்படும் என அரச தலைவர் செயலகம் கூறியுள்ளது.
கோட்டாபயவின் அறிவிப்பு திரும்பப்பெறும் வாய்ப்பு
அப்படியில்லை என்றால், பதவி விலக தீர்மானித்துள்ள அரச தலைவர் ஒருவர் அவசரமாக இப்படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பில்லை. எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை
அரச தலைவர் செயலகம் தற்போது இயங்கவில்லை என்பதே இதற்கு காரணம். அத்துடன் இதனை உறுதிப்படுத்த அரச தலைவரின் செயலாளரையோ ஏனைய உயர் அதிகாரிகளையோ தொடர்புகொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதனடிப்படையில், இது அரச தலைவர் பதவி விலகும் தீர்மானத்தை திரும்பபெறும் முதல் சமிக்ஞையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் இதுவரை எடுத்த பல முடிவுகளைத் திரும்ப பெற்றுள்ளார் என்பதையும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடை, அவ்வப்போது நடைமுறைப்படுத்திய அவசர காலச்சட்டம், ஊரடங்குச் சட்டம் போன்ற பல முடிவுகளை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச திரும்ப பெற்று வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட வரலாறு உள்ளது.
கோட்டாபயவிற்கு இருந்த தார்மீக அதிகாரம் பிடுங்கப்பட்டது
அதுபோலவே இந்த முடிவையும் கோட்டாபய ராஜபக்ச திரும்ப பெற்று வரலாற்று சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், அரச தலைவர் எதிர்வரும் 13 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அரச தலைவர் பதவி விலகுவதற்கு நல்ல நேரத்தை பார்ப்பதற்கான தேவையில்லை. அரச நிர்வாகம் தொடர்பாக அவருக்கு இருந்த தார்மீக அதிகாரம் ஏற்கனவே அவரிடம் இருந்து பிடிங்கி எறியப்பட்டு விட்டது.
பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபய, சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் இணக்கத்தை தெரிவித்துள்ளாரே அன்றி இன்னும் பதவி விலகவில்லை.
இதனால், அவரது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை நாளைய தினம் கூட திரும்ப பெறப்படலாம் என்பது சந்தேகமில்லை என அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
