முஸ்லிம்களுக்கும் தனித்தரப்பாக அழைப்பு விடுக்க வேண்டும் - ரணிலுக்கு வலியுறுத்தல்!
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அம்பாறை மாவாட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை எல்லா சமூகங்களும் நிம்மதியாக வாழுகின்ற சூழலை உருவாக்கும் தீர்வு திட்டம் முன்மொழியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளை சந்தித்து கலந்துரையாட சிறிலங்கா அதிபர் தீர்மானித்துள்ளார்.
எனினும் முஸ்லிம் தலைவர்களுக்கு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் அம்பாறை மாவாட்ட பள்ளிவாயல்களின் சம்மேளன தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸ் தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனித்தரப்பாக அழைப்பு

இதன்போதே அதிபர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க முன்வந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக இனரீதியிலான நெருக்குதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தையின் போது தனித்தரப்பாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எல்லா சமூகங்களும் நிம்மதியாக வாழுகின்ற சூழலை உருவாக்கும் தீர்வு திட்டம் முன்மொழியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை ஆய்வு செய்ய நிபுணத்துவ ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அம்பாறை மாவாட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
அம்பாறை மாவாட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனம் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸ் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயலில் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பு

இதனைத் தொடர்ந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்த வடகிழக்கிற்குள் சமஸ்டி தீர்வினைபற்றி பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதிபரினால் சகல தமிழ் தரப்பினை சந்தித்து பேசுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருகின்றது.
ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை எங்கள் மத்தியில் பலதரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்தகாலங்களில் நடைபெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல் ஒஸ்லோ மாநாடுவரையிலான இனத்தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு புறக்கணிக்கப்பட்டிருந்தமையே இன்றுவரையில் இனப்பிரச்சினை புரையோடிப்போவதற்கு காராணம் என்பதனையும் உரிய தரப்புக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

01 எல்லோருக்கும் பொதுவான சிறிலங்கா அதிபர் நாட்டிலே நிலவுகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயற்சிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக இனரீதியிலான நெருக்குதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தையின்போது தனித்தரப்பாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவேண்டும்.
அது மட்டுல்லாது, எல்லா சமூகங்களும் நிம்மதியாக வாழுகின்ற சூழலை உருவாக்கும் தீர்வு திட்டத்தினை முன்மொழிய வேண்டும் என்றும்
02 முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை மேலும் ஆய்வு செய்திட நிபுணத்துவ ஆலோசனைக்குழு ஒன்றினை அமைப்பது எனவும்
03 கிழக்கு மாகாணத்தின் ஏனைய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணப்படும் பள்ளிவாயல்களின் சம்மேளனம் மற்றும் ஜூம்இய்யதுல் உலமா சபையோடும் இணைந்து அங்கு காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வினையும் பெற்றிட அனைத்து மாவட்டங்களையும் அடங்கிய ஓர் அமைப்பாக இணைந்து செயற்படல் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்துக்கு சம்மேளன செயலாளர் A.L அன்வர்டீன் பொருளாளர் S M சபீஸ், உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்துகொண்டிருந்தனர்.
