சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்தாரா கோட்டாபய- முடிவுக்கு வருகிறதா பங்காளிகளின் அரசியல்!
நாட்டில் தற்போது அமைக்கப்படவிருப்பது கோட்டா - ரணில் அரசாங்கமே அன்றி இடைக்கால அரசாங்கமோ, தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கமோ அல்ல என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமரின் தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கம் எந்த திசை நோக்கி செல்லும் என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
புதிய அரசாங்கம், சந்திரிகா - ரணில், மைத்திரி- ரணில் அரசாங்கங்களுக்கு இணையானது. அரசியல் கட்சிகளுடன் கூடிய நிறைவேற்றுச் சபையால், பிரதமர் தெரிவு செய்யப்படவில்லை என்பதால், இது அரச தலைவரின் தனிப்பட்ட முடிவாக கருத நேரிடும்.
பெரும்பாலும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து, கோட்டாபய ராஜபக்ச இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
இதனடிப்படையில் 2003 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நிறுத்திய இடத்தில் இருந்து அவர் மீண்டும் ஆரம்பிக்கலாம் எனவும் கோட்டா- ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால், 11 அரசியல் கட்சிகளின் கூட்டணியின் அரசியலும் முடிவுக்கு வந்து விடும் எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.