குறுகிய காலத்தில் உலக சாதனை படைக்கத் தயாராகும் ரணில் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!
சிறிலங்கா பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ், இலங்கை மிக குறுகிய காலத்தில் பெருந்தொகை வெளிநாட்டு கடனை பெற்று உலக சாதனை படைக்க நடவடிக்கை எடுத்து வருவது சர்வதேச செய்தி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்கள் நாடு நின்று போகாமல் இயங்க வேண்டுமாயின் குறைந்தது 5 ஆயிரம் மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்துவதை உத்தியோகபூர்வமாக நிறுத்தியுள்ள பின்னணியில் இந்தளவு பெருந்தொகை பணத்தை எவ்வாறு கடனாக பெற முடியும் என்ற தகவலை ரணில் வெளியிடவில்லை.
ஏற்கனவே இந்தியாவின் வர்த்தக கடன்களின் கீழ் எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் இந்திய ஒன்றிய அரசாங்கம் இதன் ஊடாக இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
மேலும் இந்தியாவின் மாநிலங்களின் அரசியல் கட்சிகள் கூட இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையை தமது சந்தர்ப்பவாதத்திற்கான பயன்படுத்தி செயற்பட்டு வருவதாக இலங்கையின் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நிதியமைச்சையும் பொறுப்பேற்றார்.
எனினும் நாடு தற்போது எதிர்நோக்கும் கடும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்த திட்டங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை.
இவ்வாறான நிலைமையில் அவர் வெளிநாட்டு கடன்களை பெற பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக விமர்சிக்கப்படுகிறது.