காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா - உண்மையை வெளிப்படுத்திய பேச்சாளர்!
போராட்டங்களின் போது சிறிலங்கா காவல்துறையினர் காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை காவல்துறையினர் முற்றாக மறுத்துள்ளனர்.
காலாவதி திகதிக்கு பின்னர் எரிவாயு உரிய வகையில் இயங்காது. எனவே அதனை பயன்படுத்துவதால் பயன் இல்லை என்று காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்காக காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை சிறிலங்கா பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியுள்ளனர் என சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆய்வில் வெளியான தகவல்
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே காவல்துறை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“போராட்டக்காரர்களைக் கலைக்கும் போது, நாம் காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை. காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் அவற்றை பயன்படுத்துவதில்லை.
கண்ணீர்ப்புகை குண்டுகள்
பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படியே கண்ணீர் புகைக்குண்டுகள் பெறப்படுகின்றன. போராட்டக்காரர்களை கலைக்க, காவல்துறையினர் காலாவதியான கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனினும் எந்தவொரு தயாரிப்பு காலாவதியானாலும், அது சிறந்த முடிவுகளைத் தராது. காவல்துறையின் கலகக் குழுவின் அதிகாரிகளின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளே போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்தப்படுகின்றன.
மரண பரிசோதனை
முன்னதாக, கடந்த வாரத்தில் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதல் காரணமாகவே எதிர்ப்பாளர்கள் மூன்று பேர் இறந்தனர் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும், மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் வெளிவரவில்லை என்பதால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
