சர்வ கட்சி மாநாட்டிற்கு செல்லும் ரணில்- விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கோட்டாபய!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நடத்தவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வது என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவே இந்த சர்வ கட்சி மாநாட்டை நடத்தவுள்ளதுடன் மாநாடு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமை சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அத்தியவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான விரக்தி நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.