கூட்டமைப்பின் கருத்தை முழுமனதாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்த சிறிலங்கா அரசாங்கம்!
சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் மனதார வரவேற்பதாக சிறிலங்காவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் கூறுவது போல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமன்றி அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வகட்சி அரசாங்கமே தீர்வு
நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானதும், பாராட்டத்தக்கதும்.
இதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். எனவே, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.