யாழில் பல்தேசிய உணவகமொன்றிற்கு மறுக்கப்பட்ட அனுமதி! வெளியாகிய காரணம்
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய நிறுவனம் ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி உணவகத்திற்கு சமய அமைப்புக்கள் சில எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கட்டிட அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப் பிரத்திரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்படாமையினால், நல்லுாா் பிரதேச சபையின் 17/01/2023 ஆம் திகதி அமா்வில் விவாதிக்கப்பட்டது.
இந்த அமர்வில், சட்ட ஆலோசனை பெறுவதெனவும் அதுவரையில் குறித்த உணவகத்திற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் தீா்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
உணவகத்திற்கு அனுமதி

இதன்படி நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் 20/01/2023 ஆம் திகதி கடிதத்தின் படி உணவகத்தை தற்காலிகமாக மூடும் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் (03.02.2023) நல்லூர் பிரதேச சபையில் தவிசாளா் ப.மயூரன் தலைமையில் மேற்படி உணவகத்திற்கான அனுமதி குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது உணவகத்திற்கு எதிரே 10 மீற்றா் இடைவெளியில் சைவ ஆலயம் அமைந்திருக்கும் நிலையில் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.