நிறுவப்படும் இலங்கையின் முதல் குரங்குகள் தடுப்பு மையம்!
மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் நாட்டின் முதல் குரங்குகள் தடுப்பு மையமொன்றை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட மையத்தை நிர்மாணிக்க 150 ஹெக்டேர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
அதன்படி, குறித்த தடுப்பு மையத்தை நிர்மாணிக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்காக மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மலேசியா உட்பட பல நாடுகளில் இதுபோன்ற தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக ரூ. 283.87 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை உணவு
அதிக சேதங்களை ஏற்படுத்தும் குரங்குகளை பிடித்து தடுப்பு மையத்தில் விடவும், இனப்பெருக்க வீதத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Image Credit: iStock
மேலும், பிடிக்கப்படும் குரங்குகள் மீண்டும் சுற்றுச்சூழலுக்குள் தப்பிச் செல்லாத வகையில் மையம் பாதுகாப்பாக கட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இயற்கை உணவு போதுமானது என்றும், தேவைப்பட்டால், வெளியில் இருந்து உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |