இலங்கை தொடர்பில் ஐ.நா பொதுச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு
பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு
இலங்கையில் அரசாங்கத்தின் சுமுகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் சார்பாக ஐ.நா பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா பொதுச்செயலாளர் இலங்கை மக்களுடன் ஒற்றுமையுடன் இணைந்துள்ளார். அரசாங்கத்தின் சுமுகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வன்முறைச் செயல்களுக்கு கண்டனம்
அனைத்து வன்முறைச் செயல்களையும் பொதுச்செயலாளர் கண்டிப்பதோடு, அமைதியைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
