இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் யாழ் - கண்டி அணிகள் சிறப்பு ஆட்டம்
இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்னிஸ் வளாகத்தில் நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த நகரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முறை பிராஞ்சைஸ் டென்னிஸ் தொடரில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வெலிகம, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன.
இலங்கையின் முன்னணி உள்ளூர் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் இந்த தொடரில் கலந்துகொண்டனர்.
நிலையான வர்த்தக தளம்
இலங்கையில் போட்டித் தரமிக்க டென்னிஸின் தரத்தை உயர்த்துவதோடு, விளையாட்டின் நீண்டகால வளர்ச்சிக்காக அடிமட்ட மற்றும் உயர்திறன் பயிற்சி திட்டங்களில் மீள்முதலீடு செய்யக்கூடிய நிலையான வர்த்தக தளத்தை உருவாக்கும் நோக்கத்திலேயே SLTPL அறிமுகப்படுத்தப்பட்டது.

வீரர்கள் போட்டித்தன்மை வாய்ந்த ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் தத்தமது பிராஞ்சைஸ் அணிகளில் இணைக்கப்பட்டனர். எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுநிலைப் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பின்னர் முதல் இடம் முதல் எட்டாவது இடம் வரை வகைப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன.
குழு A-யில் கண்டி கிங்ஸ் 122 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது. குழு B-யில் யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடக்க SLTPL தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், கண்டி கிங்ஸ், யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸை வீழ்த்தி, இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் முதல் சாம்பியன் அணியாக மகுடம் சூடியது.
யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ்
யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றது. யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணி, போட்டியின் ஐந்து தனிநபர் விருதுகளில் மூன்றை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.

வில்சன் நியாயமான விளையாட்டு (Fair Play) விருது, ஆண்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது, சிறுவர்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது என்பவற்றை பெற்றுக்கொண்டது.
இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 6.5 மில்லியன் இலங்கை ரூபாய் ஆகும்.
சாம்பியன் பட்டம் வென்ற கண்டி கிங்ஸ் அணிக்கு 2.5 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
முதன்முறையாக நடைபெற்ற SLTPL தொடரின் வெற்றிகரமான நிறைவு, இலங்கை டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த தொடர் நாட்டின் வளர்ந்து வரும் திறமையான வீரர்களை வெளிக்கொணர்ந்ததுடன், சர்வதேச பங்கேற்பையும் ஈர்த்து, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான நிலையான பிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டி அமைப்பிற்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |