சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் பிரமுகர்!
மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மறுப்பு அறிக்கை
மக்கள் வங்கியில் இருந்து நான் அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திலும் தெரிவித்திருந்ததுடன், பின்னர் ஊடக சந்திப்பொன்றின் போதும் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது.
சட்ட நடவடிக்கை
ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அத்துடன் இன்று கூட எனது தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கொரோனா காலத்திலும் சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஆடைதொழிற்சாலைகள் இயங்கின.
இங்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் எனது நிறுவனத்தில் அதிகமாக வேலை செய்கின்றனர். சாணக்கியன் தெரிவித்திருப்பது போல் ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து நான் கடன் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
எனவே நான் எடுத்ததாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய அந்த கடன் தொகையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன் இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
பொய்க் குற்றச்சாட்டு
இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். ஆனால் இவ்வாறான கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் என்மீது பொய் குற்றச்சாட்டை சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக என்னை இவ்வாறு அவர் கூற முடியாதல்லவா? இதற்காக உரிய நடவடிக்கை அவருக்கு எதிராக எடுக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதற்காக என்னை திருடர் என தெரிவித்ததோடு, ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார்.
எனவே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.