நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையினை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களே!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையினை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களே என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவினை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தொரியாது. ஆனால், இது தொடர்பாக ஏதும் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரியவில்லை.
அவ்வாறு கச்சதீவினை இந்தியாவிற்கு வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது. 21வது சீர்திருத்தமானது நாட்டினுடைய நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவருக்கும் இடையிலான அதிகாரங்களை பற்றியதாகும்.
அந்தவகையில் 13வது சீர்திருத்தமும் 21வது சீர்திருத்தமும் சம்மந்தப்பட்டதல்ல. ஒரு காலகட்டத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் முறைமையினை அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், அல்லது மலையக மக்களுடைய தேசிய தலைவர் தொண்டமான், முஸ்லிம் மக்களுடைய தலைவர் அஷ்ரப் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் இதனை வலியுறுத்தி வந்தனர்.
அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என கூறியிருந்தனர். மேலும் மீனவர்களுடைய பிரச்சனை இயன்றளவு தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
மேலும் வடமாகாண மீனவர்களிற்கு இந்திய மீனவர்களின் இழுவை படகுகளினுடைய அத்துமீறிய மீன்பிடிப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வளங்கள் அழிக்கப்படுதல் போன்றவை பாரிய பிரச்சனைகளாக காணப்படுகின்றது.
அத்தோடு கடற்றொழிலாளர்களுடைய தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறான பிரச்சனைக்கு ஒரளவு தீர்வு கண்டு வருகின்றோம். அதேபோன்று எரிபொருள் பிரச்சனைக்கும் தீர்வும் எட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.
