ஐயாயிரம் ரூபா வழங்குவதால் நாட்டை முன்னேற்ற முடியாது- அரசாங்கத்திற்கு விமல் அறிவுரை!
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு திருப்தியளிக்கும் அளவுக்கு வரும் வரையில் தரப்படுத்தலில் இலங்கை முன்நோக்கி நகராது என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டுக்கு அந்நிய செலாவணியை வரவழைக்க வேண்டும் என்றால், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதால், அது நடக்காது. அந்நிய செலாவணியை உற்பத்தி செய்யக் கூடியவர்களை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு கடன்களை நம்பி தொடர்ந்தும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. வெளிநாட்டு அந்நிய செலாவணியை வழங்கக் கூடிய துறைகளை வலுப்படுத்துவதே நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையும்.
தரப்படுத்தல் நிறுவனங்கள் அதனை செய்யாது. பெற்ற கடனை செலுத்த அதே அளவு தொகையை மீண்டும் கடனாக பெறுகின்றோம். இதன் மூலம் பிரச்சினையை சிறிது நாட்களுக்கு ஒத்திவைக்க முடியும்.
இப்படி பொருளாதாரத்திற்கு பதில் வழங்கி, செல்ல வேண்டிய தூரத்திற்கு சென்று விட்டோம். நாடு தரப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில் உலகில் எவரும் கடன் தர முன்வர மாட்டார்கள்.
இதனால், கடனை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் முடிந்து விட்டது என நினைத்து, நாட்டில் அந்நிய செலாவணியை உற்பத்தி செய்யக் கூடிய தொழில் துறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.