ரஷ்ய தம்பதியை காப்பாற்றச் சென்று உயிரைவிட்ட உயிர்காப்பு வீரர்
களுத்துறை, வஸ்கடுவ கடலில் நேற்று பிற்பகல் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதியரை மீட்க முற்பட்ட இலங்கையின் உயிர்காக்கும் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடலில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதி உட்பட நான்கு பேரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த உயிர்காப்பு வீரர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிர்காக்கும் காவலராக பணியாற்றி வந்தார்.
உதவிக்கு அழைத்த ரஷ்ய பெண்

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, ரஷ்ய பெண் உதவிக்கு அழைத்ததைக் கேட்ட உயிர்காப்பாளர் கடலில் குதித்துள்ளார். எனினும், நீந்தும்போது திடீரென ஏற்பட்ட அலையில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
அதன்பிறகு, நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஹோட்டலின் இரண்டு ஊழியர்களும் கடலுக்குள் இறங்கினர், ஆனால் அவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.