விமானம் மூலம் செல்ல விசா மறுப்பு : படகு மூலம் அகதியாக தமிழகம் சென்ற இலங்கைத்தமிழர்
விமானம் மூலம் தமிழகத்திற்கு செல்ல விசா மறுக்கப்பட்டதால் படகு மூலம் அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த நிலையில் இந்திய கடலோர காவல் படையினர் இன்று அதிகாலை (10) மீட்டு மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மணல் திட்டில் நின்ற தமிழர்
இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு கடற்றொழிலாளர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என தெரியவந்தது.
தமிழகத்தில் பிறந்துள்ளார்
கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்த கியோசன் பெற்றோர்,வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன் தமிழகத்தில் பிறந்துள்ளார்.
பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்கா திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.
தந்தையின் சொத்துக்களை விற்க வந்தவர்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கை மட்டக்களப்பில் கியோசன், தந்தைக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.
நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக நேற்று (9) இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் கியோசன் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
