சர்வதேசத்துடன் நெகிழ்வை கடைப்பிடிக்கும் கோட்டாபய அரசு
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வெளிநாட்டுச் சக்திகளை கடுமையாக நிராகரிக்கும் கொள்கையை பின்பற்றி ஆட்சிக்கு வந்த இரண்டாவது ராஜபக்ச அரசாங்கம், சர்வதேச சக்திகளுடன் மிகவும் நெகிழ்வாக செயற்பட முன்வந்துள்ளது.
அந்நிய செலாவணி நாட்டிற்குள் வருவது கடுமையாக தடுக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் கடினமான நிலையில் இருக்கும் நேரத்தில் அரசாங்கம் இந்தப் புதிய பாதையில் இறங்கியுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில், சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமையை விசாரணை செய்ய, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகையை வெளிவிவகார அமைச்சு வரவேற்ற நிலையில், இந்தக் கொள்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் வரிச் சலுகைகளை நீட்டிப்பது பொருத்தமானதா என ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு இம்மாத இறுதியில் சிறிலங்காவிற்கு வருகை தரவுள்ளது.
இந்தக் குழு செப்டெம்பர் 27 நாட்டிற்கு வருகைதருவதோடு, ஒக்டோபர் 5 வரை தங்கியிருக்கும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்களின் வருகை மிகவும் வரவேற்கத்தக்கது என சிறிலங்கா வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார்.
"வந்து பாருங்கள்” என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே, ஐரோப்பிய தூதரகத்தின் வருகை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தெரிவித்திருந்தார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பரிசீலிக்கும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யாவிட்டால், ஏற்றுமதி வரிச் சலுகையை மட்டுமல்லாமல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய உதவியையும் சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
”பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமின்றி எந்த நாடும் இருக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியக் குழு வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் அச்சப்படவில்லை. எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை,“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜெனீவா மாநாட்டில் சிறிலங்கா தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பெச்லே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை துணைக்குழு நியமித்ததை அரசு உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமது இடைக்கால அறிக்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது பரிந்துரைத்திருந்தது.
அறிக்கையை ஏற்றுக்கொண்ட நேரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்காக பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.