ஸ்ரீலங்காவின் பிரதான கட்சிகளிற்குள் நெருக்கடி- கேள்விக்குறியாகியுள்ள பொதுச்செயலாளர் பதவி!
ஸ்ரீலங்காவின் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளிற்குள் நெருக்கடி நிலைமை தலைதூக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள சஜித் பிரேமதாச, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்று தலைமை வழங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிமசிங்க ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கவுள்ள நிலையில் அந்தக்கட்சியிலிருந்து பிரிந்து தற்போது எதிர்கட்சியாக உள்ள சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் நெருக்கடி நிலை உருவாகியிருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகக் கூடியதுடன் சஜித்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றக்குழு மீண்டும் கூடவுள்ளது.
ஸ்ரீலங்கா நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதி நடப்பதாகவும், தனிக்குழுவொன்று உருவாகவுள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் சஜித்தின் தலைமைத்துவத்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய கட்சியின் செயல் தவறானதொன்றாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்படடியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்சிக்குள் எந்த விதத்திலும் முரண்பாடுகள் இல்லை என்று தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம் இணையப்போவதாக வெளியாகின்ற தகவல்களும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நான் இரு மாத கால விடுமுறையில் இருக்கின்றேன். கட்சியின் உள்ளக தகவல்கள் குறித்து சரியாக தெரியாது. எனினும், கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன். சஜித் தான் எமது தலைவர்.
இவ்வாறான நிலையில் எதற்கு தலைமைத்துவத்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தவறான செயல். மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை உருவாக்கும். கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தால் அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருப்பேன். ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல் தவறானதாகும்.
என்னை அரசியலுக்கு அழைத்துவந்து அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சு பதவி வழங்கி, முதலமைச்சராக்கியது அவர்தான். இதனால் அவர்மீது இன்றளவிலும் மதிப்பு உள்ளது. இருந்தாலும் கட்சி தாவும் அரசியல் என்னிடம் கிடையாது, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். அக்கட்சியுடன் பயணம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்சமயம் நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கட்சியின் கொள்கைகளுக்கு அப்பாற் சென்று சில செயற்பாடுகளை செய்து வருவதாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த மெகா கூட்டணிக்கு தயாசிறி ஜயசேகர எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்தே பயணிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பொதுச் செயலாளர் பதவியும் கேள்விக் குறியாக இருப்பதாக கூறப்படுகின்றது.