துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்குள்ளாகும் குழந்தைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!
குழந்தைகள் தொடர்பான திட்டம் ஒன்று நுவரெலியா மாவட்டத்தை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில், பல்வேறு காரணங்களால் துன்பங்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த,
அரசாங்கம் ஒரு துரித திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள், பாடசாலைகளுக்கு செல்லாத குழந்தைகள், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதன்படி, தேவையான தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். அதேபோல், வீதி குழந்தைகளுக்கான வெற்றிகரமான திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் நாங்கள் எதிர்ப்பார்த்துள்ளோம். பிராந்திய மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் இந்த குழந்தைகளுக்காக கட்டாயம் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
குறிப்பாக வீட்டுப் பணிப்பெண்ணாக ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றால், கிராம உத்தியோகத்தரின் பரிந்துரை, மகளிர் மேம்பாட்டு அலுவலரின் பரிந்துரை மற்றும் குழந்தைகள் உரிமை அலுவலரின் பரிந்துரை ஆகியவற்றுடன் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சில விதிகள் கடந்த காலத்தில் பின்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.