நெருக்கடியின் உச்சக்கட்டம்! இலங்கையில் கலகங்கள் வெடிக்கலாம் - பகிரங்க எச்சரிக்கை
நாட்டின் கையிருப்பில் இருக்கும் டொலர் பற்றாக்குறையானது மிக மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது எனவும் இதன் மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையானது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத இடத்திற்கு வந்துள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் டொலர் பற்றாக்குறையானது மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சுமையானது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத இடத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக வர்த்தகங்கள் வீழ்ச்சியடைகின்றன. தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் நடுத் தெருவில் கைவிடப்பட்டுள்ளனர். இவற்றுக்கு உடனடியாக தீர்வு அவசியம்.
கோவிட் தொற்று நோய் நிலைமை காணப்பட்டாலும் உலகில் பல நாடுகள் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தை கண்டுள்ளன. நாமும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதனால், அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடனுவியை பெற வேண்டிய கடமை இருக்கின்றது. இல்லையென்றால், அதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. நாட்டு மக்கள் தற்போது ஆத்திரத்தில் இருக்கின்றனர். இதனை தவிர நாம் மேலும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுதான் நாட்டில் ஏற்பட போகும் உணவு பற்றாக்குறை.
சிங்கள - தமிழ் புத்தாண்டு காலம் வரும் போது நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அனைத்து பிரதேசங்களில் கிடைக்கும் தகவல்கள் இம்முறை அறுவடையானது கடந்த முறையை விட 60 வீதம் குறைவு எனக் கூறுகின்றன. இப்படியான நிலைமை ஏற்பட்டால், நாம் எதிர்நோக்க வேண்டியுள்ள அரசியல் பின்னணி குறித்து சிந்தித்து பாருங்கள்.
ஆத்திரமடைந்துள்ள மக்கள் மத்தியில் கலகங்கள் வெடிக்கலாம். இது அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியானால், இப்படியான நிலைமை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் இதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தற்போது கடனுக்கு எரிபொருள் மற்றும் உணவை பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நிறைவு செய்யுங்கள். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட உள்ள உடன்படிக்கைகளை விரைந்து முடியுங்கள்.
இந்தியாவிடம் இருந்து உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள். பொருட்கள் மற்றும் பணத்தை கடனுக்கு பெறுவதால், நாட்டின் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. எனினும் தற்காலிக நிவாரணமாக கடனுக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள். கடனுக்கு எரிபொருள் பெறும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் ஜனவரி மாதம் அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.