வெளிநாட்டு இராஜதந்திர செயற்பாட்டில் தோல்வியடைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம்!
சிறுபான்மையினரின் அதிகாரப்பரவலாக்கல், பங்கீடு சம்பந்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்தியதற்கு இந்திய அரசினை வாழ்த்துகின்றோம்.
அதே நேரத்தில் 13ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடடியாக நடத்த வேண்டும் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதற்குப் பிற்பாடு கடந்த ஒரு மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியான இராஜதந்திர அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழுவினுடைய அழுத்தங்கள், இலங்கை அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் தொடர்பான செயல்வடிவங்களை முன்நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் வெளிநாடுகள் சம்பந்தமான இராஜதந்திரச் செயற்பாட்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தியா 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்லுள்ளமை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது. புலம்பெயர் சக்திகளுடன் ஜனாதிபதி பேசப்போவதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறான விடயங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சம்பந்தப்பட்ட விடயத்தில் சில மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கை அரசின் இந்த மாற்றங்கள், அவதானிப்புகள் ஊடாக சிறுபான்மைத் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், சிறுபான்மை மக்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட விடயத்திலும் ஜனநாயக ரீதியான செயற்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து சிறுபான்மையினரினரை வெல்லவேண்டும்.
கடந்த வாரம் இலங்கைக்கு இந்தியாவின் சிரேஸ்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வருகை தந்து இலங்கை- இந்திய அரசுகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி பல விடயங்கள் குறித்து ஆராய்ந்தாலும், குறிப்பாக சிறுபான்மையினரின் அதிகாரப் பரவலாக்கல், பங்கீடு சம்பந்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டமைக்கு நாங்கள் இந்திய அரசினை வாழ்த்துகின்றோம். பாரட்டுகின்றோம்.
இந்த விடயங்களை உணர்ந்து முழுநாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடிய மூன்று இனத்துக்கும் நன்மை பயக்கக் கூடிய எல்லா மாகாண சபைகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துவதற்கான செயல்வடிவங்களை அரசாங்கம் முன்கொண்டு செல்ல வேண்டும். அதன் ஒரு கட்டமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தபட வேண்டும். அந்தத் தேர்தலை நடத்தி மக்களாட்சி அமுல்படுத்தப்படும் போதுதான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படும்.
குறிப்பாக வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச்சட்டம், சுயாட்சி, தமிழீழம் எனப் பல கருத்துக்கள் நம் மத்தியில் முட்டி மோதினாலும், தற்சமயம் 13ஆவது திருத்தச் சட்டத்தையேனும் அமுல்படுத்தினால் சிறுபான்மையினர் நன்மை பெறுவார்கள் என்ற நிலையில் அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத் தை அமுல்படுத்துவதற்கும் வடக்குக் கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள் அதன் ஆரம்ப கட்டத்துக்கு செயல் வடிவத்தைக் கொடுப்பதற்கும் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும்.
கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் தற்சமயம் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற தொனி சமூகத்தின் மத்தியில் வேரூன்றுகின்றது. அத்தோடு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புகளை நல்கி மாகாண சபையின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க கேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.