கொழும்பில் பிரபல மகளிர் பாடசாலையில் எழுந்துள்ள சர்ச்சை: கல்வி அமைச்சின் அவதானம்!
தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் நடந்த சம்பவம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய அறிக்கை கிடைத்ததன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
வருடாந்த நிகழ்வு
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும், விளையாட்டில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவியொருவருக்கு பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட குழுவினர் மூலம் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் தற்போது சமூகத்தில் பாரிய சரச்சைகள் எழுந்துள்ளன.

குறித்த மாணவி பாடசாலையில் விளையாட்டில் பல திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், பரீட்சையொன்றுக்கு தோற்றவிருந்த காரணத்தினால் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு நடைபெறும் தினத்தன்று காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒத்திகை நிகழ்வுக்கு, குறித்த மாணிவியால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
இது தொடர்பில் அந்த மாணவி பொறுப்பான ஆசிரியர்களிடமும் அறியப்படுத்தியுள்ளார்.
எனினும், மாணவி ஒத்திகை நிகழ்வுகளில் பங்கேற்காத காரணத்தினால், அன்றைய தினம் இடம்பெற்ற வருடாந்த நிகழ்வில் மாணவிக்கு வழங்கப்படவிருந்த விருதை அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகம், மற்றுமொரு மாணவிக்கு வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி
இவ்விடயத்தை, வருடாந்த விழாவி்ல் வைத்து பாதிக்கப்பட்ட மாணவி வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவு பகிரப்பட்டு வந்தது.

குறித்த விடயத்தில், தனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகவும், இந்த மாதிரியான விடங்கள் இனியும் நடக்ககூடாது எனவும் குறித்த மாணவி தெரிவித்திருந்தார்.
பாடசாலை நிர்வாகத்தில் இடம்பெற்ற தவறை தைரியமாக வெளிப்படுத்திய மாணவிக்கு பலரும் புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.
பழைய மாணவர்கள்
சம்பவம் தொடர்பில் சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாடசாலையின் தலையீட்டின் மூலம் விளையாட்டு நிபுணர்கள் குழு முன் இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்தி அறிக்கையைப் பெறுமாறு பாடசாலை நிர்வாக அதிகாரியிடம் கோருவதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |