இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு - தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நாளை காலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளனர்.