தடையை மீறி பத்மநாபாவுக்கு சிலை! துரித கதியில் இடம்பெறும் நிர்மாண பணிகள் (படங்கள்)
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தடையையும் மீறி வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகாமையில் பத்மநாபாவுக்கு சிலை அமைக்கும் செயற்பாடு துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகாமையில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவுக்கு சிலை அமைக்கும் செயற்பாடு நகர சபையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படுகிறது.
நிர்மாண பணிகள்
இந்நிலையில், தமது திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதிகளை பெற்றுக்கொள்ளாமல் குறித்த நிர்மாணம் அமைக்கப்பட்டு வருவதால், அதனை உடனடியாக இடைநிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளரால் வவுனியா நகர சபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா பிரதி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வவுனியா காவல் நிலையம் உட்பட சில திணைக்களங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதனையடுத்து சில நாட்களாக சிலை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், இன்றையதினம் குறித்த செயற்பாடு துரிதகதியில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, நாட்டின் அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆயுட்காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
