பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்த நிலையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Council) தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துநரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வெளியான காணொளி
இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து மாணவன் ஒருவர் தவறி கீழே விழுந்த காணொளி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று குருநாகலில் தனியார் பேருந்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தில் சன நெரிசல் அதிகமானதால் மாணவர்கள் சிலர் பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்துள்ளனர்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணை
இவ்வாறு பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மிதிபலகையிலிருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் பேருந்து தரிப்பிடத்திலிருந்து சென்ற காரின் கமராவில் பதிவாகி வெளிவந்துள்ளது.
மாணவன் கீழே விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சன நெரிசலால் மாணவன் தவறி விழுந்தாரா அல்லது பேருந்தின் அதிவேகத்தால் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
