பாடசாலைகளை மூடியதால் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுகின்றனர்! நாட்டை முடக்காமல் இருப்பது அவசியம் - திஸாநாயக்க
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு உலக நாடுகள் பாடசாலைகளை மூடியதால் பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். ஆகவே நாட்டை முடக்காமல் இருப்பது அவசியமாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"ஐக்கிய மக்கள் சக்தியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பரவலை தீவிரப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கொரோனா தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த இரண்டு வருடகாலமாக உலகில் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு பாடசாலைகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் உளநல மாற்றத்திற்கு உள்ளாகி தற்கொலை முயற்சிகளுக்கு தூண்டப்பட்டார்கள். விசேடமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டதனால் 16 ஆவது இடத்தில் இருந்த தற்கொலையினால் பதிவாகும் மரணங்கள் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அரச செலவு முகாமைத்துவம், அரச செயற்திட்ட வினைத்திறன், நிர்மானிப்புக்களுக்காக மக்களை ஊக்கப்படுத்தல், சமுர்த்தி செயற்திட்டத்தை அபிவிருத்தி செயற்திட்டமாக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் 2022 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
உற்பத்திப் பொருளாதாரத்திற்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருள், சமையல் எரிவாயு, ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இப்பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்ததல்ல.
எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவை நிவாரண அடிப்படையில் வழங்கப்படுகின்றமை தவறானதாகும். பெற்றோலியம், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் துறை ஆகிய பிரதான துறைகளில் காணப்படும் நட்டம் நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக காணப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) புத்திசாலித்தனமான முறையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் வெகுவிரைவில் முழுமையாக பெறுவார்கள்" என தெரிவித்துள்ளார்.