எரிபொருள் விலை அதிகரித்தால் மானியங்கள் வழங்க நேரிடும் - நிதியமைச்சர்
எரிபொருளின் விலைகளை அதிகரித்தால், பேருந்து சங்கங்கள், வெதுப்பக உரிமையாளர்கள், காய்கறி செய்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் அரசாங்கம் மீண்டும் மானியங்களை வழங்க நேரிடும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இதனால், எரிபொருளின் விலைகளை தற்போதுள்ள மட்டத்தில் வைத்திருப்பது சாதகமான செயற்படாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றன.
இதன் காரணமாக எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என பல தரப்பினர் நிதியைமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக கலந்துரையாட அண்மையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நிதியை மீண்டும் மானியமாக செலுத்த நேரிட்டால், விலைகளை அதிகரிப்பது பயனற்ற செயல் என குறிப்பிட்டுள்ளார்.
