விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் வெளியான தகவல்
இந்த ஆண்டு சிறுபோகத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேனாநாயக்க சமுத்திரத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யும் அம்பாறை மற்றும் சமாதானபுரம் விவசாயிகள் இந்த ஆண்டு சிறுபோகத்திற்கான பயிர்செய்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சிறுபோகத்துக்கான நாற்று நடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மானிய விலையில் உரம்
எனினும் அரசாங்கத்தால் மானிய விலையில் வழங்கப்படும் உரம் இதுவரை எந்த விவசாயிக்கும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு சிறு போகத்திற்கான உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு திட்டத்தையும் தயாரிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய விவசாயிகள் ஒன்றியம் (National Farmers’ Union) தெரிவித்துள்ளது.
அத்துடன் விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கை பணிகளை ஆரம்பித்திருந்தாலும், இதுவரை உர மானியம் வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் (Anuradha Tennakoon) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
