எதிர்வரும் 4 வாரங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் 4 வாரங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடனும், அவதானமாகவும் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து, அநாவசியமாக வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதிக மரணங்களும் பதிவாவதாக அவர் கூறினார்.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்கள் எனவும் தற்போது பரவிவரும் டெல்டா பிறழ்வானது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கும் தொற்றுவதற்கான வாய்புகள் காணப்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படாது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருந்தாலும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.