சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறைக்குள் திடீர் அதிரடி மாற்றங்கள்
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை படிப்படியாக ஆரவாரமின்றி மேற்கொண்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக அண்மைக்காலமாக புலனாய்வுத்துறையிலும் பாரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தர அதிகாரிகள்
கடந்த காலத்தில் இராணுவப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் புத்திக மஹதன்தில, பதவியில் இருந்து அகற்றப்பட்டு, எதுவித பொறுப்புகளும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து பிரிகேடியர் பிரபோத சிறிவர்த்தன, புலனாய்வுத்துறையில் இருந்து இராணுவ பான்ட் வாத்திய இசைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் புலனாய்வு செயற்பாடு தொடர்பில் விசேட பயிற்சிகள் பெற்றுள்ள இராணுவ அதிகாரியாவார்.
புலனாய்வுத்துறையில் இருந்த இன்னொரு பிரிகேடியர் ஷிரான் அமித், தற்போதைக்கு புனர்வாழ்வு செயற்பாட்டுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு பிரிகேடியர் பிரியலால், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரிகேடியர் குமார புலனாய்வுப் பிரிவில் இருந்து ஒதுக்கப்பட்டு, இராணுவ தலைமையக செயற்திட்ட பிரிவில் வெறுமனே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.பிரிகேடியர் நுவன் அபேசேகர, இசுருபாய செயற்திட்ட அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கேணல் தர அதிகாரிகள் இடமாற்றம்
அதனையடுத்து புலனாய்வுத்துறையில் சிரேஷ்ட கேணல் தரத்தில் இருந்த அதிகாரிகளான சேனக முதுகுமாரண கொத்தலாவலை பயிற்சிக் கல்லூரிக்கும்,கெளும் மத்துமகே பொறுப்புகள் இன்றியும், கேணல் முஹம்மத் அன்சார் புத்தளைக்கும், கேணல் புளத்வத்த முல்லைத்தீவுக்கும், கேணல் சாகர கொஸ்தா கிளிநொச்சிக்கும், கேணல் ஜயந்த ஷெல்டன் ஹம்பாந்தோட்டைக்கும், கேணல் முஹம்மத் இக்ராம் இராணுவ ஆய்வுப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக இராணுவப் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
