பிரித்தானியாவில் சர்ச்சையை கிளப்பிய விருந்துபசாரம் - அறிக்கை வெளியானது
பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் கொவிட் 19 பொதுமுடக்க நிலையில் இருந்த போது, தமது தலைவர்களின் அனுமதியுடனேயே பிரதமர் அலுவலக ஊழியர்கள் விருந்துகளில் பங்கேற்றுள்ளதாக குடிசார் அதிகாரி சூ க்றேயின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பல விருந்துகள் நடைபெற்றிருக்க கூடாது என மூத்த குடிசார் அதிகாரிகள் கூறியுள்ளதுடன், இந்தக் கலாசாரத்திற்கு சிரேஷ்ட தலைமைத்துவம் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த காலப் பகுதியில் அதன் விதிகளை மீறி பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் நடத்தப்பட்ட விருந்துபராங்கள் தொடர்பில் குடிசார் அதிகாரி சூ க்றே மேற்கொண்ட விசாரணை அறிக்கை வெளிவந்தள்ளது.
அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம், ஊழியர்கள் நோய் வாய்ப்பட்டமை, துப்புரவு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மீதான துஷ்பிரயோகம் ஆகியன குறித்து விசாரணை அதிகாரி சூ க்றே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விருந்துபராசரங்களை நடத்துவதன் மூலம் கொவிட் 19 விதிமுறைகள் மீறப்படலாம் என்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற அனைத்திற்கும் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
அனைத்து அனுபவங்களையும் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அதில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வதாகவும் பிரித்தானியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாக பொறிஸ் ஜோன்சனிடம் ஆளும் கென்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என எதிர்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்ராமர் அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுமுடக்ககாலத்தில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல் தொடர்பில் சேர் கெய்ர் ஸ்ராமரும் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.