“ரணிலை அதிபராக்குவோம்” வலுக்கும் ஆதரவு
அனைவரும் ஒன்றிணைந்து ரணிலை அதிபராக்குவோம்
நாடு பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ள இந்தக் கால கட்டத்தில் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்வதே சிறந்தது என தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.
திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (17) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்பட்ட இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண அதிபர் தெரிவு இடம் பெறவுள்ள நிலையில், நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நன்மைக்காகவும் பல சர்வதேச நாடுகளின் தொடர்பை பேணக்கூடிய ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவே உள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியை இல்லாதொழிக்கவும் அதனை மீளக் கட்டியெழுப்பவும் நாட்டில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்புள்ளது.
இதற்காக கட்சி பேதம் மறந்து, நாட்டுக்காக அதிபர் தெரிவின் போது ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக எமது கட்சியும் இதனையே விரும்புகின்றது. நாட்டின் வெற்றி மக்களின் வெற்றியாகும்.
பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய வேண்டிய நிலை
பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. எரிவாயு, எரிபொருள் எனப் பல வரிசைகள் உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது.
இதற்கான அதிபர் தெரிவு 20 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் செயற்பட்டு, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைந்து ரணிலை அதிபராக்குவோம்” என்றார்.