30 ஆண்டுகாலப் போர்..! கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் - அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு சென்ற தீர்மானம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் ( 117TH CONGRESS - 2D SESSION) அவர் சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
''2009 இல் போரின் இறுதி தருணங்களில் மிகத் தீவிரமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பலவந்தமாக கொல்லப்பட்டனர். பலர் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டனர்.
நிலையான அமைதியை உருவாக்கும் வாய்ப்பு

2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விஜயத்தின் முடிவில், இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து உத்தரவாதம் அளித்தனர்.
இலங்கை தலைவர்களுக்கு நிலையான அமைதியை உருவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர்.
போர் முடிவுக்கு வந்த காலகட்டம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கல் தொடர்ந்ததுடன் அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களும் இருந்தன.
2015 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான நீதிச் செயன்முறையை வகுத்து, இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன், 30/1 தீர்மானத்தை சபை ஏற்றுக்கொண்டது.
கோட்டாபய நிர்வாகம்

எனினும் தீர்மானத்தின் அம்சங்களை கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் கடந்த 2020 ஆம் ஆண்டு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிமொழிகளை திரும்பப் பெற்றது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியானது, ‘‘மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்க கொள்கைக்கு சவால் விடுக்கும் பிறருக்கு எதிரான அச்சம் மற்றும் அச்சுறுத்தல் பிரசாரங்களை மேற்கொள்வதாக மனித உரிமை கண்காணிப்பகம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8 ஆம் திகதி விபரித்திருந்தது.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற நட்பு நாடுகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மூல காரணங்களுடன் தொடர்புடைய இலங்கை நாட்டின் இனப்பிரச்சினை அடிப்படையான பல பிரச்சினைகள், மனித உரிமை மீறலுக்கான தண்டனையின்மை உட்பட, கவனத்தில் கொள்ளப்படாமல் இருக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நடந்ததாக கூப்படும் போர்க்குற்றங்கள் பதிலளிக்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தின.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது மில்லியன் கணக்கான இலங்கை பிரஜைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருந்து, உணவு மற்றும் எரிபொருளின் கடுமையான பற்றாக்குறையுடன் மிகவும் இக்கட்டான நிலையில் இலங்கை பிரஜைகள் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் ஊழல் உட்பட பல காரணிகள் காரணமாக அமைந்தன.
பொருளாதார நெருக்கடி

நிதி முறைகேடு, போருக்குப் பிந்தைய பாதுகாப்பு துறைச் சீர்திருத்தம், இராணுவத்தின் மீதான செலவினங்கள், வணிகக் கடன், அதிக செலவிலான அபிவிருத்தி திட்டங்கள், ஏப்ரல் 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு, சர்வதேச கொரோனா தொற்று நோய், சீனாவிடம் பெறப்பட்ட பாதகமான கடன் என்பனவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பு 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் மனிதாபியமான உதவியாக 92,000,000 இற்கும் அதிகமான டொலர்களை வழங்குவதாக அறிவித்தது.
பொருளாதார மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்காக இந்திய அரசு மேலதிகமாக இலங்கை அரசுக்கு 3,500,000,000 டொலர் கடன் வசதிகளை வழங்கியது.
ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்கள் இலங்கையர்களுக்கு அவசர மருந்து, உணவு மற்றும் சுகாதார உதவிகளை வழங்கியுள்ளன. எனினும் இலங்கை அரசு அதனை சரியாக செய்யத் தவறிவிட்டது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் பிணை முறி பத்திரம் மற்றும் கடன் செலுத்துதலை இலங்கை அரசு இடைநிறுத்தியது. இதனால், 2022 மே மாதம் முதல் நாட்டில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.
வன்முறையாக வெடித்த போராட்டங்கள்

இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான இலங்கைப் பிரஜைகள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டனர். 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த அமைதியான போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன.
2022 ஆம் ஆண்டு ஜூலை நிகழ்வுகளால், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை மக்களின் நம்பிக்கையை இழந்தார்.
ஜூலை 20, 2022 அன்று கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் இலங்கை அரசு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் மக்களின் கவலைகளுக்கு பதிலளிக்கவும் தவறிவிட்டது” - என்றுள்ளது.