சிங்கள இளைஞர்கள் சே குவேராவின் புகைப்படத்தை பொறித்த ரீசேட்களை அணிகிறார்கள் - அவர்களை கைது செய்வீர்களா? (காணொளி)
அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவரை பயங்கரவாதி என்று கூறினாலும் தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
மீண்டும் பயங்கரவாத சட்டத்தை இறுக்கமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தற்போது அவர்கள் மீது மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயம். படம் வைத்திருந்தால் பிரச்சினை என்றால் எத்தனை பேரை இவர்கள் இன்னமும் கைது செய்ய வேண்டும்.
இதனடிப்படையில் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது, இளைஞர்களின் மீது உள்ள இப்படியான வழக்குகள் மீளப்பெற வேண்டும்.
"சே குவேரா" போராளியின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட ரீசேட்களை சிங்கள இளைஞர்களும் அணிந்துகொள்கின்றனர். அப்போது அவர்களை இந்த அரசு கைது செய்யுமா? காலத்துக்கு காலம் அரசு தனக்கு வேண்டாதவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.