தடுப்புக் காவலை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு!
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் நேற்றையதினம்(07) இந்த விசாரணை இடம்பெற்றது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சலேவுக்கு எதிரான ஆதாரங்கள்
குறிப்பாக, இத்தகைய மனுவை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உள்ளதா என்பது தொடர்பில் இந்த ஆட்சேபனைகள் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைதொடர்ந்து, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட எந்தவொரு விசாரணை ஆணைக்குழுவோ அல்லது குழுவோ தனது கட்சிக்காரருக்கு எதிராக எவ்வித ஆதாரங்களையும் கண்டறியவில்லை என வாதிட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை என்றும், அவர் 2019 ஜனவரி முதல் நவம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு கற்கை நெறியொன்றை மேற்கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாத் மௌலானா - சனல் 4
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அசாத் மௌலானா என்பவர் பிரித்தானியாவின் 'சனல் 4' ஊடகத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டத்தரணி, அவற்றுக்கு எவ்வித சாட்சியப் பெறுமதியும் இல்லை என வாதிட்டுள்ளார்.

மேலும், இராணுவப் புலனாய்வுத் தலைவராக இருந்தபோது இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் சுரேஷ் சலே எச்சரித்திருந்தும், அந்தத் தகவல்களைக் கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள் தற்போது அவரையே இலக்கு வைப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை ஜூன் 4ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |