துப்பாக்கியுடன் சிறைக்குச் செல்ல அனுமதித்தோர் மீதும் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்!
துப்பாக்கியுடன் சிறைக்குச் செல்ல அனுமதித்தோருக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஒரு அமைச்சர் சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் செல்வதை சிறைச்சாலை அதிகாரிகள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள். அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச்சாலைக்குள் அங்கீகாரம் அளிக்கப்பட்டோரை தவிர அரசியல்வாதிகளோ எந்த ஒரு அதிகாரியோ துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதித்தது மிகவும் தவறான விடயமாகும்.
சிறைச்சாலைகள் ஒரு விருந்தினர் விடுதி அல்ல. துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குச் சென்ற அமைச்சர் தனியாக செல்லாது அவர் தனது நண்பர்களுடன் சென்று இருக்கின்றார். வெறுமனே அனுராதபுரம் மாத்திரமல்ல வெலிக்கடை சிறைக்கு சென்றதாகவும் அங்கு தமிழ் அரசியல் கைதிகளினை மிரட்டியதாகவும் அவர்களை முழங்காலில் இருத்தியதாகவும் கூட ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான விஷயங்கள் நடப்பதாக இருந்தால் நிச்சயமாக இதே மாதிரி ஒரு மோசமான சம்பவங்கள் இருக்க முடியாது. ஆகவே இந்த அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் இவர் அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர்.
ஆகவே இவர் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அது தமிழ் அரசியல் கைதியாக இருக்கலாம் ஆனால் ஒரு சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் சென்று பேசுவதற்கு கூட இவருக்கு உரிமை கிடையாது. எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.