சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு
இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பில் நேரடியாகவே முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டுமென சிறிலங்கா இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரினால் சரணைடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு தெரிவித்து சிறிலங்கா இராணுவத்திடம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் கோரப்பட்ட போதிலும் கடந்த நான்கு வருடங்களாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு
இதனையடுத்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்குமார் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் முன்னிலையாகி இருந்தனர்.
இணைய வழியில் முன்னிலையான இராணுவ அதிகாரி
மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்முறையீட்டாளர் சார்பில் முன்னிலையாகி, சரணடைந்த புலிகள் தொடர்பான விவர பட்டியல் இராணுவத்திடம் இருப்பதாகக்கூறி ஆதாரங்களை முன்வைத்தார்.
இதன்போது, இராணுவம் சார்பில் இராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ரவிந்திர பத்திரகே இணைய வழியில் ஆணைக்குழுவில் முன்னிலையானமைக்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டனர். இதுவொரு முக்கியமான விசாரணை என்பதால் நேரடியாகவே ஆணைக்குழுவுக்கு முன்பு முன்னிலையாக வேண்டும் என இராணுவத்துக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது.
இராணுவத்திற்கு உத்தரவு
இதன்படி எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி இராணுவம் நேரடியாக ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலறியும் விண்ணப்பம் ஒன்றுக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என RTI சட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
