சுசிலின் பதவி பறிப்பு - கோட்டாபயவின் மிகச் சிறந்த தீர்மானம் -மற்றுமொரு அமைச்சர் பாராட்டு
அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் கொள்கைகளையும் விமர்சித்த காரணத்தினால் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் இதனை முன்னரே செய்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசின் திட்டம் போன்ற கொள்கைகளை அவர் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். அரச தலைவர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அந்தக் கொள்கைகளில் தவறு இருந்தால், அதைப் பற்றி பேச இடங்கள் உள்ளன. அமைச்சரவையில் பேசலாம். மேலும், இராஜாங்க அமைச்சர்கள் அரச தலைவரை சந்திக்கின்றனர். அந்த நேரங்களில் அவர்கள் அதைப் பற்றி பேசலாம். அவர்கள் ஒரு அணிக்காக விளையாடினால், அந்த அணிக்குள் பேச வேண்டும். அவர்கள் வெளியில் பேசக்கூடாது.
மூத்த அமைச்சர்கள் என்ற முறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும் மற்றும் உள்ளே பேச வேண்டும். அரச தலைவர் சரியான முடிவை எடுத்துள்ளார். இது முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவு. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை புரிந்து கொள்ளாமல் அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு ஏற்புடையதல்ல. அம்பலமான அரசியலை அமைச்சரவையில் சேர்க்க முடியாது.
அமைச்சரவைக்குள் எதனையும் பேசி தீர்த்துக்கொள்ள அரச தலைவர் பூரண சுதந்திரம் வழங்கியுள்ளார். ஆனால் அதை விமர்சிப்பது தவறு. அரச தலைவரை நம்பி இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும். எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் வெளியில் பேசப்படுவதில்லை. பயமுறுத்துவதற்காக நாம் யாரும் இவற்றைச் செய்வதில்லை.
அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் பணி. அரசாங்கத்துக்குள்ளேயே அமர்ந்து எதிர்க்கட்சி வேடம் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த சம்பவத்தை விளம்பரப்படுத்துவதில் எதிர்க்கட்சிகள் இப்போது முட்டாள்தனமான மகிழ்ச்சியை அனுபவிக்கின்றன.
அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 5000 வழங்கப்படுவது மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாகும். இவை பற்றி முன்கூட்டி தம்பட்டம் அடிக்க மாட்டோம். அந்த விடயங்களை சரியான நேரத்தில் செய்வோம். எதிர்க்கட்சிகள் எப்போதும் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. அவை இதுவரை சொன்னது, செய்தது எல்லாம் பொய்யாகிவிட்டன.
நாட்டில் உள்ள அரச ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டம் அமைக்க பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையையும் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவுகளை எடுத்துள்ளோம். இவை தேர்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் அல்ல. நாட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்த நிவாரணங்கள் இவை. மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சியினர் எங்களிடம் கேட்டனர். இவை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் என்கிறோம்.
ஜனவரி 15 இல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றார்கள். ஆனால் ஜனவரி 15 ஆம் திகதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதியை திறந்து வைப்போம்.
அமைச்சர் பசில் நாடு திரும்பியதும் நாடு அழியும் என்றார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்றார்கள்.இந்த சலுகைகளை வழங்குவது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதை நிரூபிக்கிறது என்றார்.