கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை - பதிலடி கொடுத்த சுசில் (காணொளி)
நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி நீக்கம் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலைச் செய்வேன் இவ்வாறு பதவி விலக்கப்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.
முச்சக்கர வண்டியில் ஏறிய அவர் அங்கிருந்து ஊழியர்களுக்கு கையசைத்துவிட்டு புன்னகையுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,
பதவி நீக்கம் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000ஆம் ஆண்டிலிருந்து அமைச்சுப் பதவியை வகித்து வருகின்றேன்.
மூன்று அரச தலைவர்களுக்கு கீழ் வேலை செய்துள்ளேன். நான் சட்டத்தரணி. இனி அந்தத் தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்ற வேடதாரிகளுக்குக் கல்வியின் பெறுமதி தெரியாது.
நான் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். பொருட்களையும் ஒப்படைத்து விட்டேன். நான் இப்போது முச்சக்கரவண்டியில் தான் செல்கின்றேன். நீதிமன்றத்திற்கு சென்று வாகனத்தை பெற்றுக்கொள்வேன்.
நீதிமன்றம் சென்று சிறிது காலத்திலேயே வாகனமொன்றை கொள்வனவு செய்ய முடியும். கொள்ளையடித்து எடுப்பது அல்ல. நான் நீதிமன்றத்திற்கு சென்று, தொழிலை செய்து, வாகனத்தை வாங்குவேன். சிறந்த எதிர்காலமாக அமையட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று அதிரடியாக பதவி நீக்கியிருந்தார்.
அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுசில் பிரேமஜயந்த கடுமையாக விமர்சித்து வந்த நிலையிலேயே இந்த முடிவினை எடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் இன்று பதவி நீக்கப்பட்டிருந்தார். இதனிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்டமையானது தனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You May Like This