டயகம பெண்ணில் மரணத்தில் சந்தேகம்! உரிய விசாரணைக்கு கோரி ஒன்றுதிரண்ட மக்கள்
டயகம காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட டயகம மேற்கு தோட்டம் 5ஆம் பிரிவில் கடந்த 6ஆம் திகதியன்று சாமிநாதன் தங்கேஸ்வரி (வயது - 53) என்ற பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார்.
குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குறித்த தோட்ட மக்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 100 பேர் வேலைநிறுத்தம் செய்து வீதிக்கு இறங்கி பதாதைகளையும் கறுப்புக் கொடிகளை ஏற்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் தோட்டத்தில் உள்ள சிறி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக பேரணியாக வந்து, பெண் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எதிர்ப்பு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காவல்துறையினர் சரியான விசாரணை முன்னெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலை பார்க்கவிடாமல் பெட்டியினை திறக்கப்படாமல் நல்லடக்கம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆற்றில் மிதந்த சடலம் உடையின்றி கிடந்தமையால் இதில் சந்தேகம் நிலவுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமான இந்த செயலில் நீதி வேண்டும், முறைக்கேடான விடயங்கள் நடந்திருப்பின் சட்டத்தின் முன் குற்றவாளியை முன்னிருத்தப்பட வேண்டும் என்பதையும், பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான அறிக்கை காவல்துறையினர் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனவே காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.