சுவிஸிலிருந்து பல மில்லியன் பெறுமதியான தெய்வ விக்கிரகங்கள் திருகோணமலைக்கு!
சுவிஸ் நாட்டிலிருந்து திருகோணமலை மாவட்ட எல்லையோரக் கிராமங்களில் உள்ள ஆலயங்களுக்கு உலோக விக்கிரகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுவிஸ் நாட்டில் உள்ள சூக் கூன்ன் பேர்க் சித்திவிநாயகர் ஆலய நிர்வாக சபையினர் இந்த விக்கிரகங்களை அனுப்பியுள்ளனர்.
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உலோக தெய்வ விக்கிரகங்களை அவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
தெய்வ விக்கிரகங்கள்
மேற்படி பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உலோக தெய்வ விக்கிரகங்கள் மற்றும் ஆலயப் பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டியைச் சுவிஸ் நாட்டிலிருந்து சூக் சித்திவிநாயகர் ஆலய கௌரவ தலைவர் இளங்கோ, சுவிஸ் தொழிலதிபர் திரு50 (திருச்செல்வம்) ஆகியோரின் நிதிப் பங்களிப்போடு புகழ்மிகு திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத் தலைவர் சட்டத்தரணி துசியந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சூக் சித்திவிநாயகர் ஆலய சமூகமும், புலம்பெயர் தமிழ் மக்களும் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையோரங்களில் உள்ள இந்து ஆலயங்களை வளர்க்க வேண்டும் என்ற நல்நோக்கிலும் ஆலயங்கள் வளம்பெற்றாலே அப்பகுதியில் தமிழர் பண்பாடு, கலை, வரலாறு மற்றும் மொழி என்பவற்றைப் பாதுகாக்க முடியும்.

இதன் மூலமே எல்லையோரங்களைச் சிங்கள ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும் என நம்பி இத்தகைய பேருதவிகளைச் செய்து வருகிறார்கள்.
இத்தகைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, புலம்பெயர் தேசங்களில் உள்ள ஆலயங்கள் பல லட்சக்கணக்கான நிதியைக் கொண்டிருந்த போதிலும் எல்லையோரங்களில் உள்ள இந்துக் கோயில்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவுவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.
பல்வேறு நெருக்கடி
கேளிக்கை நிகழ்வுகளையும் தேவையற்ற செலவுகளையும் தவிர்த்து தாயகத்தில் எல்லையோர மாவட்டங்கள் மற்றும் எல்லையோரக் கிராமங்களில் உள்ள ஆலயங்களைக் கட்டி வளர்ப்பதும் அவற்றின் ஊடாகச் சமூக சமயப் பணிகளை ஆற்றுவதுமே அவசியமானது.
இவற்றைப்புலம்பெயர் ஆலயங்கள் மட்டுமல்ல ஈழத்தில் உள்ள ஆலயங்களும் சமூகப் பொறுப்போடு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

எல்லையோரங்களில் வாழுகின்ற தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள், பூர்வீகக் கிராமங்களாக இருந்த தமிழ்க்கிராமங்கள் இன்று சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அரச நிர்வாகக் கட்டமைப்பு சிங்களமயமாக்கப்பட்டுள்ளது, அப்பகுதிகளில் வாழும் மக்கள் தினமும் இனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள்.
அடையாளங்கள்
அவர்களின் மொழி, பண்பாடு, கலை மற்றும் கலாசாரம் என்பன அழிக்கப்படுகின்றன, இதன் மூலம் தமிழ்த்தேசிய அடையாளங்கள் இல்லாதொழிக்கப்படுகின்றன.
இவற்றைக் கருத்தில்கொண்டு எல்லையோரங்களில் உள்ள ஆலயங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும், அவற்றின் ஊடாகத் தமிழ்த்தேசிய அடையாளங்கள் பேணப்பட வேண்டும்.

இதன் மூலம் தமிழர் தாயக எல்லைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும், இதன் மூலம் எல்லையோரங்களில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்காகப் பாடுபடும் சுவிஸ் சூக் சித்திவிநாயகர் ஆலயம் போன்ற அமைப்புகளும் அடியவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு புலம்பெயர் ஆலய சமூகங்கள் உழைக்க வேண்டும் என அனைவராலும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
