யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட T56 உள்ளிட்ட ஆயுதங்கள்...! உள்ளே வந்த கால பின்னணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) மீட்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சந்தேகிக்கப்படுகின்றது.
நூலகத்தின் கூரைத் திருத்த வேலைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது கூரைக்குள் இரண்டு மகஸின்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை
அதனையடுத்து கோப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மகஸின்கள் இரண்டையும் மீட்டதுடன் அதன் அருகில் சுமார் ஐந்தடி நீளமான வயரையும் மீட்டனர்.

அதன்பின்னர் கூரைக்குள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனும் சந்தே கத்தில் கூரையினுள் தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்த வேளை, ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று மேலும் இரண்டு மகஸின்கள், மூன்று சிறிய குண்டுகள்.
கிளைமோரை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்துப் பொருட்கள், சேலைன் போத்தல், பஞ்சு, காயங்களுக்குக் கட்டும் பன்டேஜ், இரத்தக்கறையுடன் சாரம் உள்ளட்டவை மீட்கப்பட்டன.
அடுத்த கட்ட நடவடிக்கை
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் கோப்பாய் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதனையடுத்து மன்றினால் வழங்கப்படும் கட்டளைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, துப்பாக்கி மகஸின்கள் சுற்றப்பட்டு இருந்த பத்திரிகை, சேலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின் அடிப்படையில் அவை 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |