அமெரிக்காவை நுழையவிட்ட தைவான்! தொடர்ந்தும் சீனாவின் அச்சறுத்தல்
அமெரிக்க படை வீரர்கள் தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எங்களுக்கு பரந்த அளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. சீனாவிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என தைவான் அதிபர் சாய் இங்க் வென் (Sai Ing Wen) தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர், தைவான் தனி நாடானது. ஆனால் இதை சீனா ஏற்காமல், தங்களது ஒருங்கிணைந்த பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது.
எனினும் தைவான், சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜனநாயக முறையிலான அரசுதான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்தநிலையில் தைவானை சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) கடந்த 8ஆம் திகதி தெரிவித்துள்ளார்.
இது உலக அரங்கில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில்தான் தைவான் உள்ளது. இந்த தைவானுக்கு எதிராக படை பலத்தை பயன்படுத்தவும் சீனா தயங்காது என்ற கருத்து நிலவுகிறது.
இந்த ஒக்டோபர் மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டுமே சீனா 150 போர் விமானங்களை, அதுவும் அணுகுண்டு போடுகிற ஆற்றல் வாய்ந்த விமானங்களை, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களை தைவான் பகுதியில் பறக்க விட்டது.
இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான உறவு, கடந்த பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாகி இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஊடகமொன்றுக்க வழங்கிய செவ்வியின் போது தைவான் அதிபர் சாய் இங்க் வென் கருத்து வெளியிடுகையில்,
தைவானில், 2 கோடியே 30 லட்சம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஜனநாயகத்தைப்பாதுகாக்கவும், தங்களுக்குத் தகுதியான சுதந்திரத்தை உறுதி செய்யவும் ஒவ்வொரு நாளும் கடினமாக முயற்சித்து வருகிறோம்.
சீனாவிடம் இருந்து வருகிற அச்சுறுத்தல், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாங்கள் இந்த முயற்சியில் தோற்றுப்போனால், இந்த மதிப்புகளில் நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் போராட வேண்டியது மதிப்புக்குரியது தானா என்று சந்தேகிக்கிற நிலை வந்து விடும். அமெரிக்க படை வீரர்கள் தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா எங்களுக்கு அந்த வகையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. அதன் நோக்கம், எங்கள் இராணுவ திறனை அதிகரிப்பதுதான். தைவான் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகும்.
உலக அளவில் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, ஜனநாயக மதிப்பீடுகள் நிலை நிறுத்தப்படுவதற்கு தைவான் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.