தலிபான்களின் தங்க வேட்டை - வெளிநாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான “பாக்திரியா” என்றழைக்கப்படும் தங்க புதையலை தலிபான்கள் தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் அந்த நாட்டின் கலாச்சார ஆணைய துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் கூறும்போது,
"பாக்திரியா தங்கம் எங்கிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த தங்க புதையல் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் தேசவிரோத குற்றமாக கருதப்படும்.
இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“பாக்திரியா” தங்க புதையல்...
கடந்த 1978-ம் ஆண்டில் கிரேக்க, ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் விக்டர் சரியானிடி தலைமையில் ஆப்கானிஸ்தானின் டில்யாமலைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது 6 கல்லறைகளில் இருந்து 20,000-க்கும்மேற்பட்ட தங்க நகைகள், தங்கத்திலான பொருட்கள், தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவை கிரேக்க- பாத்திரியா மற்றும் குசான பேரரசுகளின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது.
கி.மு. 256 - கி.மு. 100-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசியா மற்றும் இந்திய துணை கண்டத்தை கிரேக்க-பாக்திரியா பேரரசு ஆட்சி செய்தது.
இதன் பிறகு கி.பி. 30 - கி.பி. 375-ம்ஆண்டு வரை மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் பெரும் பகுதியை குசான பேரரசு ஆட்சி செய்தது.
இந்த காலக்கட்டத்திற்கு சொந்தமான குறித்த தங்க புதையல் தொகுப்பு, ‘பாக்திரியா தங்கம்' என்றழைக்கப்படுகிறது. இது பல ஆயிரம் கோடி மதிப்புடையாகும்.
அமெரிக்க படைகளின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடைபெற்றபோது, ‘பாக்திரியா தங்கம்’ காபூலில்உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பதவியேற்றுள்ள நிலையில், பாக்திரியா தங்கம் எங்கிருக்கிறது என்று தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 22 மணி நேரம் முன்
